முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 124 ரன் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா!
கோல்கட்டா: இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்சில் 153 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு 124 ரன்களை தென் ஆப்ரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 37/1 ரன் எடுத்து, 122 ரன் பின்தங்கியிருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பேட்டர்கள் விரைவாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சைமன் ஹார்மர் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (29) சிக்கினார். கேப்டன் சுப்மன் கில் (4) 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். மஹாராஜ் ஓவரில் ரிஷாப் பன்ட் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார்.
மஹாராஜ் பந்தில் ராகுல் (39) அவுட்டானார். தனது விளாசலை தொடர்ந்த ரிஷாப் பன்ட் மீண்டும் மஹாராஜ் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பாஷ் பந்தில் ரிஷாப் (27) அவுட்டாக, ஸ்கோர உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஹார்மர் பந்துவீச்சில் துருவ் ஜுரல் (14), ரவிந்திர ஜடேஜா (27), அக்சர் படேல் (16) வெளியேறினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 30 ரன் முன்னிலை பெற்றது.
பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய 'சுழலில்' சிதறியது. குல்தீப் பந்தில் ரிக்கிள்டன் (11) எல்.பி.டபிள்யு., ஆனார். ஜடேஜா பந்தில் மார்க்ரம் (4) அவுட்டானார். தொடர்ந்து சுழலில் மிரட்டிய ஜடேஜாவின் ஒரே ஓவரில் முல்டர் (11), ஜோர்ஜி (2) சிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஜடேஜா பந்தில் ஸ்டப்ஸ் (5) போல்டானார். மறுபக்கம் அக்சர் பந்தில் கைல் (9) போல்டானார். குல்தீப் யாதவ் வலையில் யான்சென் (13) சிக்கினார். இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 93/7 ரன் எடுத்து, 63 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் (நவ 16), கடைசி வரை தனியாக கேப்டன் பவுமா போராடி 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 153 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், குல்தீப், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். 124 ரன்கள் என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கிறது.
மேலும்
-
முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடியை தவறாக பயன்படுத்தினர்; பிரசாந்த் கிஷோர் கட்சி புகார்
-
பக்கத்துக்குப் பக்கம் தகவல் பெட்டகம்
-
'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை
-
மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை