நாளை வெளியாகிறது

500 அரசு பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு... முதல் முறையாக ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 500 அரசு பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு நாளை வெளியாகிறது.

புதுச்சேரியில் அரசு துறைகளில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஓவ்வொரு பதவிகளின் நியமன விதிமுறைகளை காலத்துகேற்ப திருத்தி, ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,800க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. குறுகிய காலம் உள்ள நிலையில், அதற்குள் 1,000 அரசு பணியிடங்களை நிரப்பிவிட வேண்டும் என, புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 500 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப அறிவிப்பு நாளை வெளியாகிறது. குறிப்பாக, வேளாண் தொழில்நுட்ப அதிகாரிகள், யு.டி.சி., எல்.டி.சி., உள்பட 7 அரசு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.



விண்ணப்பம் எங்கே: இந்த அரசு பணியிடங்களுக்கான கல்வி தகுதி, இட ஒதுக்கீடு வாரியாக காலியிட விபரங்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளது. விண்ணப்பங்கள் நாளை 18ம் தேதி இதே இணையதளத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



வழக்கமாக ஒவ்வொரு அரசு பணியிடத்திற்கும் தனித்தனியே போட்டித் தேர்வு நடத்தப்படும். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த அரசு பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டி தேர்வுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த அரசு காலியிடங்களை நிரப்ப முதல் முறையாக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தேர்வு மதிப்பெண்: : இந்த மூன்று வகை அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் என்ற அடிப்படையில் இனி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான போட்டி தேர்வு இடைநிலை, மேல்நிலை, பட்டதாரி என, மூன்று நிலைகளில் நடத்தப்பட உள்ளது. குரூப் - சி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த இடைநிலை போட்டி தேர்வு 100 மதிப்பெண்ணிற்கு 10ம் வகுப்பு தரத்தில் கொள்குறி வகையில் இருக்கும்.

குரூப்-சி ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டித் தேர்வு, முதல் தாள், இரண்டாம் தாள் என, இருதாள் கொண்டதாக நடத்தப்படும். இந்த போட்டித் தேர்வை பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்கள் எழுதலாம். குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் கொண்டதாக 100 மதிப்பெண்ணிற்கு கொள்குறி வகையில் நடத்தப்படும்.



தகுதி மதிப்பெண்: போட்டி தேர்வில் பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 20 ஆகவும், ஓ.பி.சி., எம்.பி., மீனவர், முஸ்லீம், இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement