மனைவியை வெட்டிய கணவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை

கூடலுார்: கூடலுார் அருகே, பணம் கேட்டு மனைவியை வெட்டிய கணவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

கூடலுாரை சேர்ந்தவர் பிரபு, 35. இவர் மனைவி ஜான்சி ராணி. இவர், ஓவேலி பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பிரபு சரியாக பணிக்கு செல்லவில்லை. இதனால், இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு ஏப்., மாதம், சம்பள பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரபு, கத்தியால் மனைவி வெட்டியுள்ளார். காயமடைந்த மனைவி கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சரவணகுமார், குற்றவாளி பிரபுவுக்கு, நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement