தாய்லாந்து- - கம்போடியா மோதல் அமெரிக்கா மத்தியஸ்தம் தோல்வி

பாங்காக்: தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து- - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், நேற்று காலை இரு நாடுகளின் எல்லையில் தீவிர சண்டை நீடித்தது.

தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், கடந்த 7ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை துவங்கியது.

ஒரு வாரமாக மோதல் நீடிக்கும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எல்லையோரம் கிராமங்களில் வசிக்கும் நுாற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், அப்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், நேற்று காலை இரு நாட்டு எல்லைகளிலும் தீவிர சண்டை நடந்தது. தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், கம்போடியா பி.எம்., 21 ராக்கெட்டுகளை ஏவியதாகவும் மாறி மாறி குற்றஞ் சாட்டுகின்றன.

Advertisement