ஒன்றிணைவு அன்பால் அல்ல பயத்தினால் பிறந்தது: தாக்கரே சகோதரர்களை தாக்கிய பட்னவிஸ்

மும்பை; தாக்கரே சகோதரர்களின் ஒன்றிணைவு அறிவிப்பு என்பது அன்பால் அல்ல, பயத்தினால் பிறந்தது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்து உள்ளார்.



மஹா. உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா(யுபிடி) மற்றும் ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மும்பையில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்து இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர் இரு குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தாக்கரே சகோதரர்களின் இந்த ஒன்றிணைவு அறிவிப்பு மஹா. அரசியலில் உற்று பார்க்கப்படுகிறது. இந் நிலையில், இவர்கள் அமைத்துள்ள கூட்டணி என்பது அன்பால் அல்ல, பயத்தினால் பிறந்தது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்து உள்ளார்.

நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது;


இருவரும் தங்களின் அரசியல் பிழைப்புக்காக தற்போது போராடுகிறார்கள். மும்பை மக்கள் அவர்கள் பின்னால் செல்ல மாட்டார்கள். அவர்கள் மஹாஹதி கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள். உணர்ச்சி பெருக்குக்கு மக்கள் ஈர்க்கப்பட மாட்டார்கள், மாறாக வளர்ச்சியை தான் அவர்கள் விரும்புகின்றனர்.


அவர்களின் (தாக்கரே சகோதரர்கள்) நிருபர்கள் சந்திப்பு என்பது மலையை தோண்டி எலியை கண்டுபிடிப்பது போன்றது. எங்கள் ஹிந்துத்துவாவை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். நாங்கள் ஓட்டுக்காக ஹிந்துவாக மாறவில்லை. தொடர்ந்து தங்களை மாற்றிக் கொள்பவர்கள் ஹிந்துத்வாவை போதிக்கக்கூடாது. ஓட்டுக்காக காவி திரைகளை போட்டுக் கொள்பவர்கள் நாங்கள் அல்ல.


எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. விரைவில் அதுபற்றி அறிவிப்போம்.

இவ்வாறு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பேட்டி அளித்தார்.

Advertisement