நான்கு மாநிலங்களில் 6 தொகுதிகளில்... இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் வாஜ்பாய்!

1


புதுடில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பிறந்த நாள். ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதையும் பூர்த்தி செய்த, முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் வாஜ்பாய். அவருக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு.


நல்லாட்சி தினம்





eவாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம்தேதி குவாலியரில் பிறந்த இவர், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி காலமானார். அவரை கவுரவிக்கும் விதமாக, வாஜ்பாயின் பிறந்த நாளை, நல்லாட்சி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இன்று அவருடைய 101வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் செய்திடாத, சாதனையை வாஜ்பாய் படைத்துள்ளார்.


ஒரே தலைவர்






வாஜ்பாய், 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தார். இதன்மூலம், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக முழு 5 ஆண்டு காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றார். ஒரே தொகுதியில் காலம் காலமாக போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்வாகும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியில், 4 மாநிலங்களில் ஆறு வெவ்வேறு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்பியாக தேர்வான, ஒரே இந்திய அரசியல் தலைவர் வாஜ்பாய்.


இரும்புக்கோட்டை





1957ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தின் பல்ரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறையாக எம்பியாக தேர்வானார். பின்னர் மீண்டும் 1967ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1971ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் குவாலியர் தொகுதியிலும், 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை நியூ டில்லி தொகுதியிலும் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். பிறகு, 1991ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியிலும், உத்தபிரதேசத்தின் லக்னோ தொகுதியிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றி பெற்றார்.

1996ம் ஆண்டு குஜராத்தின் காந்தி நகர் தொகுதி மற்றும் லக்னோவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, லக்னோவை தனது இரும்புக்கோட்டையாக மாற்றினார். மொத்தமாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டில்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் 6 வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட வாஜ்பாய், அனைத்திலும் வெற்றி பெற்று அசத்தினார்.


அதுமட்டுமின்றி, 1962ல் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 1986ல் மத்திய பிரதேசத்தில் இருந்தும் இருமுறை ராஜ்ய சபா எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



சபதம்






1977ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத முதல் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக வாஜ்பாய் பதவி வகித்தார். இந்தப் பதவி காலத்தில் தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டுமானால், உலகத் தரத்திலான சாலைகளை உருவாக்க வேண்டும் என்று சபதம் போட்டார். அப்படி கொண்டு வந்தது தான், 1998ம் ஆண்டு உருவெடுத்த 'தங்க நாற்கர சாலை' திட்டம்.

1998ல் இந்தியாவில் அமைந்த கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் சூழ்ச்சிகளால் கவிழ்த்தது. அதன்பிறகு, 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, 23 கட்சிகளின் கூட்டணியுடன் முழு 5 ஆண்டு பதவி காலத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துக் காட்டியவர் வாஜ்பாய்.

அதுமட்டுமில்லாமல், நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் பல்வேறு பணிகளை செய்த பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.

Advertisement