வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்

2

ஆமதாபாத்: ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார். மக்களின் உணர்வுகள், வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தோல்வி அடைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் ஆமதாபாதில் 27 கிமீ நீளமுள்ள வடிகால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பள்ளம் தோண்டாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். இதன் திறப்பு விழா இன்று (டிச.28) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதையை திறந்து வைத்தார். அப்போது காங்கிரசையும், ராகுலையும் விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது;

மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் அவர்களை(காங்கிரஸ்) தோற்கடிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மோடியின் அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படும். நாங்கள் ராமர் கோவிலை கட்டினால் எதிர்க்கிறீர்கள்?

நாங்கள் கொண்டு வரும் எந்த திட்டத்தையும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினால் எதிர்க்கிறீர்கள்.ஊருடுவல்காரர்களை விரட்டினால் எதிர்க்கிறீர்கள். 370வது பிரிவை நீக்கினால் எதிர்க்கிறீர்கள், பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் எதிர்க்கிறீர்கள்.

மக்கள் விரும்புவதை நீங்கள் எதிர்க்கிறீர்கள். பின்னர் உங்களுக்கு எங்கிருந்து ஓட்டுகள் கிடைக்கும்? உங்கள் சொந்த கட்சியினரே யதார்த்தத்தை உங்களுக்கு நம்ப வைக்க முடியாதவர்களாக உள்ளனர். பின்னர் நாங்கள் எப்படி விளக்கி கூறமுடியும்?

ஆட்சி மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் அதற்கு பதிலாக எப்ஐஆர்களை புரிந்து கொள்வதில் மிகுந்த மும்முரமாக ராகுல் இருக்கிறார். பாஜவின் வளர்ச்சி சார்ந்த அரசியலும், நிர்வாக திறனும் தொடர்ந்து மக்களிடம் எதிரொலிக்கின்றன.

இவ்வாறு உள்துறை அமித் ஷா பேசினார்.

Advertisement