'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ., ஆனவர் திருமாவளவன்'

சென்னை: “தமிழகத்தில் திராவிடமா, தமிழ் தேசியமா என்ற போர் நடக்கிறது,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


சென்னையில், நேற்று சீமான் அளித்த பேட்டி:

கீழடி நாகரிகத்தை, திராவிட நாகரிகம் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். கீழடியை தமிழர் நாகரிகம் என சொல்வதில் என்ன பிரச்னை? தமிழகத்தில் திராவிடர், தமிழர் போர் நடக்கிறது. 86,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை.

முதல்வர் ஸ்டாலின் வணிகர்களை அழைத்து, 'ரெயின்போ' என தமிழில் எழுதுங்கள் என்கிறார். தமிழுக்கு பதிலாக, 'தங்கிலீஸ்' வளர்க்கின்றனர்.

தமிழ் மண்ணை ஈ.வெ.ராமசாமி மண் என்று ஏன் கூற வேண்டும்? வ.உ.சிதம்பரனார் மண், காமராஜர் மண், கக்கன் மண் என்று சொல்ல ஏன் மறுக்கின்றனர்.

யாரை எதிர்த்து தி.மு.க., துவக்கப்பட்டது; எதற்காக துவக்கப்பட்டது? ஈ.வெ.ராமசாமியை, அண்ணாதுரையும் கருணாநிதியும் விமர்சித்ததை விட நான் அதிகம் விமர்சிக்கவில்லை.

பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து, மங்களூரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தான்; நான் இல்லை.

எனக்கும் திருமாவளவனுக்கும் இடையே மோதலை உருவாக்கி, திராவிடன் மஞ்சள் குளிக்கிறான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement