'கோவிந்தா... கோவிந்தா' கோஷம் முழங்க... பரமபதவாசலில் பிரவேசித்த நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்திப்பெருக்கு

திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவில் நேற்று, கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீவீரராகவப்பெருமாள், 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற கோஷம் முழங்க பரமபதவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, விஷ்ணு தலங்களில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதிகாலை, 3:00 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு, மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக சென்று, நம்மாழ்வாருக்கு காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 3:30 மணிக்கு, கனகவல்லி தாயார், பூமிதேவி மற்றும் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மஹா திருமஞ்சனத்தை தொடர்ந்து, கருடவாகனத்தில், பாண்டியன் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளினார்.


தொடர்ந்து, 'கோவிந்தா... கோவிந்தா... 'என்ற பக்தர்கள் கோஷத்துடன், நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக பிரவேசித்து, அருள்பாலித்தார். வாயிலின் வெளியே, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உற்சவர்கள், நம்பெருமாளுக்கு எதிர்சேவை சாதித்தனர். அதன்பின், பச்சைப்பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள், காலை, 10:00 மணிக்கு, திருவீதியுலா சென்று, கொடிமரம் அருகே வீற்றிருந்து நாள் முழுவதும் அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு சொர்க்கவாசல் நடைசாத்தப்பட்டது.



* திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள், வெண்பட்டு போர்த்தியபடி, கருடவாகனத்தில், பரமபத வாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து, பாற்கடலில் பள்ளி கொண்ட சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; கோவில் வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



* கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமே ஸ்ரீவரதராஜபெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று அருள்பாலித்தனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மலர்களால், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகமும், சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.



* படியூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், கொடுவாய் அலமேலு மங்கா நாச்சியார் சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், திருப்பூர் குருவாயூரப்பன் கோவில், தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணப்பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள், தாளக்கரை நரசிம்ம பெருமாள், பெருமாநல்லுார் மற்றும் மங்கலம் ஆதிகேசவ பெருமாள், அனுப்பர்பாளையம் அரங்கநாதர் கோவில், ராயபுரம் கிருஷ்ணர் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பரமபதவாசல் திறப்பு விழா, வெகு விமரிசையாக நடந்தது.



@block_B@ 1,00,008 லட்டு திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க, ஒரு லட்சத்து, 08 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்து, பரமபத வாசலை கடந்து வந்த பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், அனைத்து பக்தர்களுக்கும் கேசரி பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், கேசரி பிரசாதம் வழங்கப்பட்டது.block_B



@block_B@ 8ம் தேதிவரை திறப்பு ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை திறந்த பரமபதவாசல், இரவு அடைக்கப்பட்டது. இரவுப்பத்து உற்சவம் நடப்பதால், பக்தர்கள் வசதிக்காக, இன்று முதல், ஜன., 8 ம் தேதி வரை (6 ம் தேதி நீங்கலாக) மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பரமபதவாசல் திறந்திருக்கும்; 8 ம் தேதி இரவு, ஆழ்வார் மோட்சஷம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.block_B

Advertisement