ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்

கோத்தகிரி: 'ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மகளிர் சுய உதவி குழுவினர் பெரும் பயனடைந்துள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டது.

மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவி குழு இயக்கம் மூலம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பட்டு உள்ளனர்.

இத்திட்டத்தில், புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், சுழல் நிதி, வங்கிக் கடன் இணைப்பு, பெருங்கடன், தனிநபர் கடன், தொழில் முனைவோர் கடன் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் போன்ற பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

வருமானத்தை பெருக்கும் தொழிலுக்கு கடன் உதவிகள் வழங்கி, சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, பயிற்சி அளித்து தொழில் தொடங்க வங்கி கடன் வழங்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், '' இத்திட்டதின்படி, வாசனை பயிர்களுக்கான உற்பத்தி, ஏற்றுமதி திறனை அதிகரிக்கும் பொருட்டு, வாழை தோட்டம் கிராமத்தில், 20 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, சுழல் நிதியாக, மொத்தம், 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதே பகுதியில், 20 நபர்கள் கொண்ட மற்றொரு குழுவுக்கு, 'கோழிகள், ஆடுகள், தீவனம், பதிவேடு பராமரிப்பு,' உள்ளிட்ட தேவைக்கு, 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்று மாவட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மகளிர் சுய உதவிகள் பெரும் பயனடைந்துள்ளனர்,'' என்றார்.

பயனாளிகள் தேவரம்மா, தேவி ஆகியோர் கூறுகையில், '' மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்தின் உதவியால், சுயநிதியில் கோழி மற்றும் ஆடுகள் வளர்த்து, தங்களது பொருளாதாரம் மேம்பட்டுள்ளது,'' என்றனர்.

Advertisement