துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

வால்பாறை: சக்தி -தலநார் எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வால்பாறையிலிருந்து, 24 கி.,மீ. தொலைவில் அமைந்துள்ளது சக்தி - தலநார் எஸ்டேட். இதைச்சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள கவர்க்கல், சக்தி - தலநார் எஸ்டேட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப்பகுதியில் துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாததால், இங்கு வசிக்கும் தொழிலாளர்கள், 24 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை அரசு மருத்துவமனைக்குத்தான் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

சில நேரங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வரும் போது, உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இது குறித்து, சக்தி - தலனார் எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கவர்க்கல் எஸ்டேட் பகுதியை சுற்றிலும் சக்தி-தலநார், பிளண்டிவேலி, மகாவீர், லில்லி, மகாலட்சுமி உட்பட, பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை.

குறிப்பாக, போதிய அளவு பஸ்வசதி கூட இல்லை. இந்தப்பகுதியில் போதிய மருத்துவ வசதியும் இல்லை. காய்ச்சல், தலைவலி என்றால் கூட மாத்திரை வாங்க முடியாத பரிதாப நிலையில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, தலனார் எஸ்டேட் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement