அரசு பள்ளிகளில் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட அறிவிப்பாணை ரத்து; ஐகோர்ட் உத்தரவு

7

மதுரை: அரசு பள்ளிகளில் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. மாணவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? அவர்களின் பெற்றோர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா உள்ளிட்ட பின்புல தகவல்களை சேகரிக்குமாறு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமீர் ஆலம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜன 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் அறிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின் போது மாதிரி பள்ளி என்று கூறி ஏன் இந்த தகவல்களை கேட்கிறீர்கள்? இதை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? என்று நீதிமன்றம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவே இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்த தகவல்ககள் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும். மாணவர்களின் தகவல்கள் அனைத்தும் உணர்வு பூர்வமானவை. அரசு பள்ளிகளில் கேட்பது போல், தனியார் பள்ளிகளில் கேட்டுள்ளீர்களா? இப்படி தகவல்களை சேகரிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கும் என்று கூறி அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement