போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்

9


புதுடில்லி: '' குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்றபடி போன்கள் அல்லது இன்டர்நெட்டை பயன்படுத்துவது இல்லை,'' என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.


டில்லியில் நடந்த வளர்ந்த இந்தியாவின் இளைய தலைவர்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: நான் போன்களை பயன்படுத்த மாட்டேன். தனிப்பட்ட விஷயங்களை தாண்டி, இண்டர்நெட் அல்லது போன்களை பயன்படுத்த மாட்டேன். அவை இல்லாமல் சமாளித்துக் கொள்வேன். வெளிநாடுகளில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமானால் மட்டும் சில நேரம் பயன்படுத்துவேன். மற்றபடி தேவையில்லை. தகவல் பரிமாற்றத்திற்கு இன்னும் சில வழிகள் உள்ளன. சாமானிய மக்களுக்கு அது தெரியாது. இந்தியா எல்லைப் பகுதியில் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் மற்றும சமூக மேம்பாடு உட்பட அனைத்து துறைகளிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.


இன்றைய இளைஞர்கள் சுதந்திர இந்தியாவில் பிறந்தது அதிர்ஷ்டம். நான் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிறந்தேன். நமது முன்னோர்கள் சுதந்திரத்துக்காக போராடி பல இன்னல்களை சந்தித்தனர். பகத்சிங் போன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர். நேதாஜி வாழ்நாள் முழுவதும் போராடினர். நாம் சுதந்திரம் பெற மஹாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்ய வேண்டியிருந்தது. நாம் ஒரு முற்போக்கான சமூகமாக இருந்தோம். மற்ற நாகரிகங்களை அல்லது வழிபாட்டு தலங்களையோ தாக்கவில்லை. ஆனால்,பாதுகாப்பு விஷயத்தில்நாம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால், வரலாறு நமக்கு பாடம் கற்றுக் கொடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement