அதிபர் டிரம்ப் உடன் பேச மறுத்தார் மோடி; அமெரிக்க அமைச்சர் புலம்பல்

38

நியூயார்க்: ''இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்கள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது,'' என்று கடந்தாண்டு அறிவித்த பிரதமர் மோடி, அதன்படி செயல்பட்டு வருகிறார். அதிபர் டிரம்ப் உடன் பேசுவதற்கு பிரதமர் மோடி மறுத்து விட்டதாக, முதல் முறையாக அமெரிக்க வர்த்தக அமைச்சரே புலம்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தடாலடியாக பேசக்கூடியவர்; தான் செய்வதே சரி என்றும், தான் மட்டுமே சிறந்த தலைவர் என்ற வகையிலும் பேசக்கூடியவர். தான் செய்யும் பணிகளுக்காக, தனக்கு நோபல் பரிசு கட்டாயம் தரப்பட வேண்டும் என்று வாதிடக்கூடியவர். அவரது ஏடாகூடமான பேச்சு, செயல்களால் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளே கடும் அதிருப்தியில் இருக்கின்றன.



டிரம்ப்பை புகழ்ந்து பேசி, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த காரணத்தால், பயங்கரவாத நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார் டிரம்ப். ஆனால், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். அது மட்டுமின்றி, இப்போது 500 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதல் காரணம்



இந்தியா மீதான அவரது அதிருப்திக்கு பல காரணங்கள் இருக்கின்றன. 'இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய மூன்றாம் நாடுகள் யாரும் காரணமில்லை' என்று வெளிப்படையாக அறிவித்தது ஒரு முக்கிய காரணம். ஏனெனில், 'போரை நான் தான் தலையிட்டு நிறுத்தினேன்' என்று தம்பட்டம் அடித்து வருகிறார் டிரம்ப்.



சமீபத்தில் டிரம்ப் உத்தரவுபடி வெனிசுலா நாட்டின் அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து, தங்களுக்கு வேண்டும் என்று மிரட்டல் தொனியில் டிரம்ப் பேசி வருவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை இழுபறி



இத்தகைய சூழ்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வருகிறது. அமெரிக்க வேளாண் உற்பத்தி பொருட்கள், பால் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது டிரம்ப் அரசின் முக்கிய வற்புறுத்தலாக இருக்கிறது. இதை இந்தியா ஏற்க மறுத்து விட்டது.



என்ன விலை கொடுத்தாலும்...



டில்லியில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவை பொறுத்தவரை எங்கள் விவசாயிகள் நலன் தான் முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.



''தனிப்பட்ட முறையில் இதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் தயார். விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்கள் நலன்களை காக்க இந்தியாவும் தயாராக இருக்கிறது,'' என்று அறிவித்தார். அவர் தான் கூறிய படி நடந்து கொண்டுள்ளார் என்பது அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் ஒரு பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.


லுட்னிக் பேட்டியில் கூறியதாவது: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் தயாராகி விட்டது. அது இறுதியாக வேண்டுமெனில், பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் போனில் பேச வேண்டும். இதற்கென நேரம், நாள் குறித்து இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.


மூன்று வெள்ளிக்கிழமைகள் கால அவகாசம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தியா இதை ஏற்க மறுத்தது. இந்திய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் பேச மறுத்து விட்டார். இதனால், இந்தியாவை விட வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பின் தங்கியிருந்த வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள், முன் சென்று ஒப்பந்தம் ஏற்படுத்தி விட்டன.

இந்த ஒப்பந்தம், அதிபர் டிரம்ப் உடையது. அவர் தான் ஒப்பந்தம் ஏற்படுத்துகிறார். மோடி மட்டும் அவருடன் பேசி விட்டால் போதும். ஆனால் அதை அவர்கள் செய்ய தயாரில்லை. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் எல்லாம் இப்படித்தான் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்தியாவில் நிலவும் அரசியல் சிக்கல்களால் இந்த தாமதம் ஏற்படுகிறது. ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு இன்னும் கதவு திறந்தே இருக்கிறது, இவ்வாறு லுட்னிக் தெரிவித்துள்ளார்.

'பிரிட்டனுக்கு இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஸ்டாமர் போனில் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்தினார்' என்று லுட்னிக் தெரிவித்துள்ளார்.

மோடி எப்போது டிரம்ப் உடன் பேச மறுத்தார் என்ற விவரத்தை லுட்னிக் வெளியிடவில்லை. கடந்தாண்டு ஜூலை மாதத்தில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஜெர்மானிய பத்திரிகை ஆகியவை, டிரம்ப் உடன் மோடி பேச மறுத்து விட்டதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement