உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்

17

சென்னை: 'திரையில் இருக்கும் ஜனநாயகன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தரையில் இருக்கும் இந்த (சீமான்) ஜனநாயகனை கவலைப்படுவதில்லை,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

ஓட்டுக்கு காசு கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். மக்களின் ஓட்டு பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு பக்கம், மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் நாங்கள் தனித்து நிற்போம். கூட்டமாக நிற்பதற்கு வீரமும், துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும், துணிவும் தேவை.


விளம்பர அரசியல்




விளம்பர அரசியல், செய்தி அரசியல் செய்யும் கூட்டம் இருக்கிறது. அண்மையில் கொடுத்த லேப்டாப்பில், கருணாநிதி, ஸ்டாலின் போட்டோக்கள் இருக்கின்றன. அதை பார்க்க சகிக்காமல் மாணவர்கள் அழிப்பதையும் பார்க்கிறோம்.

ஒரு கட்சிக்கான விளம்பரத்தை தேடுவது மாண்பல்ல. இந்த லேப்டாப்பை 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போன வருடமே கொடுத்திருந்தால், அது மக்கள் அரசியல். கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கொடுப்பது தேர்தல் அரசியல்.

பொங்கலுக்கு ரூ.3000 கொடுப்பதை போன ஆண்டே கொடுத்திருந்தால், அது மக்கள் அரசியல். அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இப்போது கொடுப்பது தேர்தல் அரசியலாகத்தான் தெரிகிறது. இந்தப் பொங்கல் மக்களுக்கு தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கலத்தான் இருக்கிறது.


இந்தியர், திராவிடர் என்பவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். நாங்கள் தமிழர்கள் என தனித்து நிற்கிறோம். இந்தப் பொங்கல் தமிழ்த் தேசிய பொங்கலாக இருக்கும். தன்மானம் மிக்க தமிழ் மக்கள் திராவிடத்தை பொங்க வையுங்கள் என்று சொல்கிறேன்.

திராவிட தீண்டாமையை துடைத்தெறிய போராடுவதை விட, செத்து ஒழிவதே மேல். நீ (திமுகவினர்) முதலில் தமிழனா? திராவிடனா? தமிழரின் பொங்கல் திருநாளை, எதுக்கு திராவிடப் பொங்கல் என்று அடையாளப்படுத்துகிறாய். திராவிடம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை. தேவர் பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?

இந்தப் பொங்கலுக்கு ரூ.3000 எதுக்கு? இதனால், ரூ.6,800 கோடி இழக்கிறோம். ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன். இந்த நான்கரை வருடத்தில் மட்டும் ரூ.4.50 லட்சம் கோடி கடன். இந்தத் தொகை இருந்தால், நாட்டை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும்.

இப்ப வரைக்கும் சென்னையில் மழை பெய்தால், மழைநீர், குடிநீர் வழிந்தோட இடமில்லை. 60 ஆண்டு ஆட்சி செய்து விட்டார்கள், தலைநகரில் பயணிக்க பாதை இல்லை. மழைநீர் தேங்காமல் ஒன்றும் இல்லை. வெள்ளத்தை தேங்க வைத்து நிவாரணம் கொடுப்பது தேர்தல் அரசியல், வெள்ளமே தேங்காமல் சாலையைப் போட்டு பராமரிப்பது தான் மக்கள் அரசியல்.

ஜனநாயகன்





பராசக்தி தமிழ் படத்தில் தமிழ் வாழ்க என்றும், தெலுங்கு படத்தில் தெலுங்கு வாழ்க என்றும் இடம்பெற்றிருப்பது வியாபாரத்திற்கு தான். வியாபாரி என்ன செய்வான். வரலாறை வரலாறாக பதிவு செய்ய முடியாது.

இலக்கியம், புராணங்கள் பொய் பேசும். வரலாறு பொய் பேசாது, பொய் பேசக் கூடாது. ஆந்திராவில் படம் வெளியாகும் போது, நாங்கள் ஹிந்தியை எதிர்த்தோம் என்று போட முடியாது. பராசக்தியை பான் இண்டியா படமாக்க முடியாது. தமிழகத்தோடு பார்த்துவிட்டு நிறுத்திக்க வேண்டும். இந்தப் படத்தை வட இந்தியாவில் வெளியிட முடியாது.


நான் நடித்த 'அடங்காதே' படத்திலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. தனக்கு எதிரான கருத்துக்கள் வரும் போது குரல்வளையை அரசுகள் நசுக்குகின்றன. திரையில் இருக்கும் ஜனநாயகன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தரையில் இருக்கும் இந்த (சீமான்) ஜனநாயகனை கவலைப்படுவதில்லை.

படத்துக்கு, பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நர்ஸூகள், போராட்டம் நடத்துவதை பற்றி யாரும் பேசுவதில்லை.


நாங்க நம்பணுமா?





கரூர் சம்பவம் தொடர்பாக யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், ஈரோட்டில் அனுமதித்த நேரத்தை விட 5 நிமிடம் கூடுதலாக பேசிவிட்டேன். என் மீதும், என் தம்பிகள் மீதும் 7 வழக்குகள் போட்டுள்ளீர்கள். உன் ஈவெரா பற்றி பேசினால் தாங்க மாட்டீங்கிற, ஒரே நாளில் 150 வழக்குகள் போட்டுள்ளனர்.

முத்துராமலிங்கத் தேவர் குறித்து பேசும் போது, வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கறீங்க. நிரந்தர முதல்வர் என்று சொன்னவன் எல்லாம் எங்கு படுத்து இருக்காங்க என்று பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்.

பண்டிகையில் படம் (ஜனநாயகன்) வெளியாகவில்லை அவ்வளவு தானே, அடுத்த 10 நாள் கூடுதலாக ஓடினால் பிள்ளைகள் பார்த்துகிட்டு போகிறார்கள். பள்ளி,கல்லூரிகளில் அரசியல் பேசக் கூடாது என்று சொன்ன நீ, சினிமா பற்றி பேசக்கூடாது என்று ஏன் தடை போடல. இறை வழிபாட்டை விமர்சித்த நீ, திரை வழிபாட்டை ஏன் விமர்சிக்கவில்லை. இதனால், தான் திரையரங்கில் தனக்கான தலைவனை தேடுகிறார்கள்.

ஜனநாயகனுக்கு ஆதரவாக சென்சார் போர்டை விமர்சித்து முதல்வர் நள்ளிரவில் டுவிட் போடுகிறார். மத்திய அரசை நீங்க எதிர்க்கிறீர்களா? நாங்கள் நம்ப வேண்டுமா? ஆப்பரேசன் சிந்தூர் நடந்த போது முதலில் கொடியை தூக்கிட்டு பேரணி போனது யாரு, நீங்க தானே?

துரோகி அல்ல... பகைவன்





மத்தியில் காங்கிரஸ், பாஜ ஆளும் போது, கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் துரோகி கிடையாது, என் இனத்தின் பகைவன். என் நிலத்தின் உரிமைகளை எல்லாம் பறித்தவன். ஹிந்தியை திணித்து, கச்சத்தீவை தாரைவார்த்து, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கி, ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திணித்தது காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement