அங்கீகாரமில்லாத மனைகளை பதிந்தால் கிரிமினல் வழக்கு: பதிவுத்துறை எச்சரிக்கை

சென்னை : 'அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை, பதிவுக்கு ஏற்க கூடாது; அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும், கிரிமினல் வழக்கு பாயும்' என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்ய, 2016ல் தடை விதிக்கப்பட்டது. இதை அமல்படுத்தும் வகையில், பதிவு சட்டத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டது.

இது தொடர்பாக, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கினார். இருப்பினும் சில இடங்களில், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக, நகர், ஊரமைப்பு துறை, பதிவுத் துறையில் புகார் செய்தது.

இந்நிலையில், முறையான அங்கீகாரம், வரன்முறை சான்றிதழ் இல்லாத, மனை பத்திரங்களை பதிவு செய்ய ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்தது. இதனால், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவுக்கு வருவது குறைந்துள்ளது.

எனினும், சில இடங்களில், வீட்டு மனை என்று குறிப்பிடாமல், அங்கீகாரமில்லாத வீட்டு மனை பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் பதிவு செய்வதாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, சார் -பதிவாளர் அலுவலகங்களில், புதிய அறிவிப்பு பலகை வைக்க, பதிவுத்துறை உத்தரவிட்டது. அதன்படி, சார்-பதிவாளர் அலுவலகங்களில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் கூறியிருப்பதாவது:

அங்கீகாரமில்லாத, வரன்முறை செய்யப்படாத, வீட்டு மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதை சார் - பதிவாளர்கள், பதிவுக்கு ஏற்கக் கூடாது.

இதை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் உட்பட அனைவர் மீதும், கிரிமினல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement