ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்

9

கிஷ்துவார்: ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் பல்வேறு குழுக்களாக தேடி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் கிஷ்துவார் மாவட்டம் சிங்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியில், பாதுகாப்பு படையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் குழுவினர், திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.

இரு தரப்புக்கும் இடையேயான இந்த சண்டை பல மணிநேரம் நீடித்தது. சண்டையில் பாதுகாப்பு படையினரில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர் கஜேந்திர சிங் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.

இதையடுத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் விரிவுபடுத்தி உள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும், சிஆர்பிஎப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement