நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்

புதுடில்லி: மத்திய அரசின் பட்ஜெட் மீது நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்தவித ஏமாற்றமும் இருக்காது என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது; நடுத்தர குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில், கடந்த ஆண்டே அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி, வருமான வரி விலக்கில் மிகப்பெரிய சலுகைகள் வழங்கப்பட்டன. உற்பத்தித் துறை, சேவைத் துறை, கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவதிலும், சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் இந்த பட்ஜெட் அதிக கவனம் செலுத்தியுள்ளது. எனவே, நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.

பங்குச்சந்தை சரிவுக்கு, பத்திரப் பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நாட்டை வலுப்படுத்தவும், பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் இந்த பட்ஜெட் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை மக்கள் உணரும் போது, பங்குச்சந்தை மீண்டும் உயர்வைக் காணும் என்று நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement