இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

2

டெஹ்ரான்: அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று ஈரான் மதகுருவும் ஆட்சியாளருமான அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும்.


நாங்கள் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த விரும்பவில்லை. ஆனால் ஈரான் தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும். சமீபத்திய கிளர்ச்சி ஒரு ராணுவப் புரட்சியைப் போன்றது. அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது.


அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களால் ஈரானியர்கள் பயப்படக்கூடாது. போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மசூதிகளைத் தாக்கினர். மேலும் குரானை எரித்தனர். இது ஒரு சதித்திட்டம் போன்றது. எனவே போராட்டக்காரர்களை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். இவ்வாறு அயதுல்லா அலி கமெனி கூறினார்.

Advertisement