தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு

11

சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைத்து, எங்களை பேச்சுக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறி உள்ளார்.

தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவை, விரைவாக அமைத்து, முதலில் எங்களை அழைத்து தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தாமதமவதால், சென்னை பேரணி மற்றும் புதுச்சேரி நடைபயணத்தில் பங்கேற்க இருந்த, அக்கட்சி பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், சென்னை வருவதாக இருந்தது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காந்தி பெயரை நீக்கிய, மத்திய அரசை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபயணத்தில் பங்கேற்க இருந்தார். அதன்பின், புதுச்சேரி சென்று, அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடக்கும், நடைபயணத்தில் பங்கேற்கும் வகையில், பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முற்றும் புதுச்சேரி வரும்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து பேச, வேணுகோபால் திட்டமிட்டிருந்ததாகவும், தகவல் வெளியானது. கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஷோடங்கர்,முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் போட்டியிட விரும்பும், தொகுதிகள் பட்டியலை அளித்தார்.

அப்போது, தி.மு.க.,தரப்பில், 'தொகுதி பங்கீடு குழு அமைத்த பின் பேசுவோம்' என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், தமிழகம் வர இருந்த வேணுகோபால், தி.மு.க., தரப்பை சந்தித்து கூட்டணி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்தவிருந்தார். இது தெரிந்ததும், தி.மு.க., தரப்பில் 'எங்கள் கட்சி சார்பில், கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, இன்னும் குழு அமைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, வேணுகோபால் தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார். ஆனால், இதை வெளியில் சொல்ல விரும்பாத காங்கிரசார், 'மத்திய பட்ஜெட் தாக்கலுக்காக பார்லி,யில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவரால் தமிழகம் வர முடியவில்லை; அதனால், அவருடைய தமிழக பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது' என கூறுகின்றனர்.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், சென்னை வந்தார்.

அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைத்து, எங்களை பேச்சுக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் நன்கு வளர்ந்துள்ளதோடு வலுவாக உள்ளதால் தான், தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட கட்சிகளும், எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன.

விரைவில் தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்கு அழைத்ததும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழு சென்று, அவர்களோடு பேச்சு நடத்தும். பேச்சு, நல்லபடியாக முடியும் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement