தீர்ப்பு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது: உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

3

- டில்லி சிறப்பு நிருபர் -

உயர் நீதிமன்றங்கள் வழக்கின் தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டு, நீண்ட நாட்களுக்கு தீர்ப்பு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, பொதுவான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


'ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 4ல், வழக்கு ஒன்றில் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அந்த தீர்ப்பு இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடமும் தீர்ப்பு நகல் வழங்கப்படவில்லை. எனவே அந்த தீர்ப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பக்சி மற்றும் நீதிபதி விபின் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:யாரையும் தனிப்பட்ட முறையில் நாங்கள் குறைகூறவில்லை. ஆனால், இது போன்ற தாமதம் நீதித்துறையின் முன் உள்ள ஒரு சவால். மேலும், அடையாளம் காணக்கூடிய ஒரு நோய், இது முடிவுக்கு வர வேண்டும். நீதிக்காக காத்திருப்பவர்களின் நலன்களுக்கு எதிராக இந்த நோய் மேலும் பரவுவதை அனுமதிக்க முடியாது.


இந்த குறிப்பிட்ட விவகாரத்தில், அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2025ல், தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட தேதிகள், தீர்ப்புகள் எப்போது அறிவிக்கப்பட்டன, எப்போது அவை இணையதளங்களில் பதிவேற்றப்பட்டன என்பது உள்ளிட்ட தகவல்களை அனைத்து உயர் நீதிமன்றங்களும் சமர்ப்பிக்க வேண்டும். உயர் நீதிமன்றங்கள் வழங்கும் அறிக்கைகளின் அடிப்படையில், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்குமான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement