சென்னையில் டேபிள் டென்னிஸ் * பிப். 10ல் துவங்குகிறது

சென்னை: சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 2021 முதல் 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2023, 2024 என கோவாவில் இரு முறை நடந்த இத்தொடர், கடந்த ஆண்டு (2025) முதன் முறையாக சென்னையில் நடந்தது. தற்போது இரண்டாவது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர், வரும் பிப். 10-15ல் சென்னையில் நடக்க உள்ளது. மொத்த பரிசுத் தொகை, ரூ. 2.90 கோடி
ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில், இந்திய சார்பில் 23 பேர், பிரதான சுற்றில் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கடந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய, உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள மானவ் தக்கார், இந்திய அணிக்கு தலைமை ஏற்றுள்ளார். இவருடன், டபிள்யு.டி.டி., பீடர் தொடரில் (வதோதரா) சாம்பியன் ஆன மனுஷ் ஷா, தமிழகத்தின் சத்யன், ஹர்மீத் தேசாய் இடம் பெற்றுள்ளனர். தவிர, அனிர்பன் கோஷ், திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரியானுஜ், பிரதான சுற்றில் பங்கேற்க உள்ளனர்.
2025 ஆசிய யூத் சாம்பியன் திவ்யான்ஷிக்கு, பெண்கள் ஒற்றையர் பிரிவில், 'யூத் வைல்டு கார்டு' வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் ஒற்றையரில் 4 'வைல்டு கார்டு' வாய்ப்பு (சிறப்பு அனுமதி) இந்திய வீராங்கனைகள் அனுஷா, சயாலி, காவ்யா, தனிஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தவிர தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி நேரடியாக களமிறங்குகிறது. கலப்பு இரட்டையரில் சிண்ட்ரெல்லா, பயாஸ் ஜெயின் 'வைல்டு கார்டு' பெற்றனர்.

Advertisement