ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரால் வெங்கச்சேரி பாலம் வலுவிழக்கும் அபாயம்

வெங்கச்சேரி: பிரதான குழாய் 'ஏர்வால்வில்' இருந்து வெளியேறும் குடிநீரால் வெங்கச்சேரி உயர்மட்ட பாலம் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மாகறல் - வெங்கச்சேரி இடையே செய்யாற்றின் குறுக்கே 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், செய்யாற்றங்கரையில் அமைக்கபட்டுள்ள ஆழ்குழாயில் இருந்து உயர்மட்ட பாலம் வழியாக அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய பிரதான குழாய் செல்கிறது.

இக்குழாயில் தேங்கும் தேவையற்ற காற்றை வெளியேற்றி, நீரோட்டத்தைத் தடையின்றி சீராக கொண்டு செல்லும் வகையில் 'ஏர்வால்வு' அமைக்கப்பட்டுள்ளது.

ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீர், நேராக பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் விழும் வகையில் வழித்தடம் அமைக்கவில்லை. மாறாக, பாலத்தில் உள்ள நடைபாதை வழியாக குடிநீர் செல்கிறது. இதனால், நடைபாதை மற்றும் பக்கவாட்டு சுவர்களில் பாசி படர்ந்த நிலையில் உள்ளது.

இதனால், பாலத்தின் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

மேலும், பாலத்தின் கான்கிரீட் தளத்தில் தொடர்ந்து செல்லும் குடிநீரால் நீர்கசிவு ஏற்பட்டு பாலத்தின் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளில் துருப்பிடித்து, நாளடைவில் பாலம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, குடிநீர் குழாய் ஏர்வால்வில் இருந்து வெளியேறும் குடிநீர், பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement