கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்

1

பெங்களூரு: ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில மது விற்பனையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், அதிகாரிகள் பணிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கிளம்பின.


கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பிய இந்தக் குற்றச்சாட்டு குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பாஜ தலைவருமான ஆர்.அசோகா, சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுத்தார்.


ஆனால், பாஜவினரின் இந்தக்கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த பாஜவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு பாஜகவினர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த பாஜ தலைவருமான ஆர்.அசோகா உள்ளிட்ட பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதிகாலையில் பாஜ எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

Advertisement