லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

4

திரிபோலி: மறைந்த லிபியாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் மும்மெர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எண்ணெய் வளமிக்க வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் சுமார் 42 ஆண்டு காலமாக சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மறைவுக்குப் பிறகு, கடாபியின் அரசியல் வாரிசாக மகன் சைப் அல் இஸ்லாம் பார்க்கப்பட்டார்.


இந்த நிலையில், சைப் அல் இஸ்லாமை மேற்கு லிபியாவில் உள்ள ஜிந்தான் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தப்பியோடியுள்ளது. லிபியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தக் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


லிபியா தனது பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியதில் சைப் அல் இஸ்லாம் பெரும் பங்காற்றினார். 2011 கிளர்ச்சிக்குப் பிறகு நீண்ட கால சிறைவாசத்திலிருந்து மீண்ட அவர், அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்றார்.


போர் குற்றச்சாட்டுகள், சிறை தண்டனைகள் உள்ளிட்ட காரணங்களால் முதலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் நீதிமன்றத்தின் மூலம் அவரது வேட்புமனுவை ஏற்கச் செய்தார்.


ஆனால், லிபியாவில் 2021ம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில், அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டவிவகாரங்கள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement