நெல்லை கொள்முதல் செய்த அதிகாரிகள்

பள்ளிப்பாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த ஜூலை மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் வந்த தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையத்தில் எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சமயசங்கலி, சின்னார்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். சில வாரங்களாக நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், எலந்தகுட்டை, எளையாம்பாளைம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த மாதம், 10ல் திறக்கப்பட்டது.


எளையாம்பாளையம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு, அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால், அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் திறந்தவெளியில் விவசாயிகள் நெல்லை குவித்து வைத்து, 13 நாட்களாக காத்திருக்கின்றனர்.


இதுகுறித்து, கடந்த, 1ல், நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இரண்டு நாட்களாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement