பால்கனி இடிந்து விழுந்து ஒருவர் காயம்

பட்டாளம்: பட்டாளம் பகுதியில், வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்; ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.

புளியந்தோப்பு, பட்டாளம் பராக்கா தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன், 58. இவர், புரசைவாக்கம், தானா தெருவில் பூக்கடை வைத்துள்ளார்.

தன் மனைவி கலா, மகள் ஜமுனா, மருமகன் கார்த்திக் ராஜா, மகன் பிரவீன்குமார் என அனைவரும், கூட்டுக்குடும்ப மாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில், வாசுதேவன் கடையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் அமர்ந்திருந்தார்.

அப்போது, திடீரென பால்கனி உடைந்து விழுந்துள்ளது.

இதில், வாசுதேவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பால்கனி உடைந்து விழுந்ததில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. விபத்து குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement