போலீஸ் செய்திகள்...மதுரை

மனைவி கண் முன் கணவர் பலி மேலுார்: கூலிபட்டி திருப்பதி 50, டிரைவர். நேற்று முன்தினம் மாலை தனது மனைவி விஜயாவுடன் 40, மேலூரில் இருந்து சொந்த ஊருக்கு டூவீலரில் சென்றார். நாயத்தான்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த மினிலாரி மோதியதில் மனைவி கண் முன்னே திருப்பதி இறந்தார். காயமடைந்த விஜயா மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

காளை முட்டி பலி அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடியில் சோனை கருப்பணசாமி கோயில் உற்ஸவத்தை முன்னிட்டு பிப்.5ல் எருது கட்டு விழா நடந்தது. புது விளாங்குடி ராமமூர்த்தி நகர் முத்துக்ருப்பன் மகன் சங்கிலி கருப்பு 29, என்பவரை காளை வயிற்று பகுதி யில் முட்டியதில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சங்கிலி கருப்பு நேற்று இறந்தார். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயில் கருகி பலி மதுரை: மணிநகரம் வைரமுத்து 46. இவர் பிப்.7 இரவு ராஜாமில் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது தீப்பற்றி கருகி கிடப்பதாக அவரது மனைவி திலகத்திற்கு தகவல் கிடைத்தது. காயத்துடன் மீட்கப்பட்ட வைரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று இறந்தார்.

இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்தார். திலகர்திடல் போலீசார் கூறுகையில், வைரமுத்துவுக்கு நோய்ப் பாதிப்பு இருந்தது. அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம் என்றனர்.

சில்மிஷ முதியவர் கைது பாலமேடு: இப்பகுதி கிராமத்தை சேர்ந்த சில்லி என்ற சின்னச்சாமி 81, இவர் கிராம பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்.ஐ.,மெகராஜ் ஆகியோர் சின்னச்சாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

கொலை வழக்கு: ஐவரிடம் விசாரணை மேலுார்: டி.உலகுபிச்சன்பட்டி ராஜ்குமார் 33. நேற்று முன்தினம் மாணிக்கம் பட்டியில் செயல்படாத குவாரி தண்ணீரில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் சில தினங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஆண்டி என்பவரை பத்து பேர் சேர்ந்து தாக்கியதை பவித்ரா 30, வீடியோ எடுத்தார். தாக்கியவர்கள் வீடியோவை அழிக்க சொல்லி மிரட்டினர். பவித்ரா தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லவே, அவர் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் புலியங்குளம் கருப்பு 35, டி.உலகுபிச்சம்பட்டி ரமேஷ் 32, தனுஷ்கோடி 31, திருவாதவூர் ஜெயராஜ் 37, தமிழரசன் 33 உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement