எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தடை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

'எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது; இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில், நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முதல்வர் மம்தா ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷனுக்கு எதிராக திரிணமுல் காங்., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முதல்வர் மம்தா பானர்ஜி தனியாக பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேர்தல் கமிஷன் நியமித்துள்ள, மைக்ரோ அப்சர்வர்களை மாற்றுவதற்காக, மாநில அரசு வழங்கிய, 8,550 'குரூப் - -பி' அதிகாரிகளின் பட்டியலை ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த அதிகாரிகள் அனைவரும், இன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அல்லது தேர்தல் பதிவு அதிகாரிகள் முன் பணியில் சேர வேண்டும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான காலக்கெடு பிப்., 14 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆவணங்களைச் சரிபார்க்க கூடுதல் காலம் தேவைப்படுவதால், இந்தத் தேதியை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கிறோம்.

இந்த விவகாரத்தில் தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளையோ நாங்கள் பிறப்பிப்போம். ஆனால், எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், தேர்தல் கமிஷன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தொடர்பான ஆவணங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததுடன், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது இதுவரை மாநில அரசு வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளது.


- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement