சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்

2

- நமது சிறப்பு நிருபர் -


ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இணையதளங்களில் போலி தகவல்களை பரப்பினால், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை பதிவிட்டால், சட்டவிரோதமாக கருதப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.


அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின், 'எக்ஸ்' சமூக வலைதளத்தை உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி.பி.டி., போல, 'கிராக்' என்ற ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, எக்ஸ் வலைதளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆபாச படங்கள் வெளியிடுவது, போலி செய்திகளை உருவாக்குவது என, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். எனவே, கிராக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்க்க, எக்ஸ் நிறுவனம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில், சமூக வலைதளங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி தகவல்களை பரப்பினாலோ, ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டாலோ சட்டவிரோதமாக கருதப்படும் என, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.


அதன் விபரம்:

* தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021ல், இதற்காக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, வரும் 20ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

* புதிய விதிகளின்படி ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் எந்தவொரு தகவல்களை பரிமாறினாலும், அதை சித்தரிக்கப்பட்ட பதிவு என முத்திரை குத்த வேண்டும்.

* அந்த முத்திரை சமூக வலைதள பயனாளர்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும்.

* இந்த முத்திரையை பயனாளர்கள் அழிக்கவோ, அகற்றவோ அனுமதிக்கக் கூடாது.

* புதிய விதிகளின்படி ஏ.ஐ., தொழில்நுட்ப பதிவுகள் சட்ட திட்டங்களுக்குள் வராது என, 'எக்ஸ், மெட்டா, இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இனி வாதிட முடியாது.

* மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயனாளர்களின் பொறுப்புகள் குறித்து சமூக வலைதள நிறுவனங்கள் அறிவுறுத்தல் வழங்குவது அவசியம்.

* அதாவது போலி செய்திகளை உருவாக்கி பதிவிட்டால், கணக்கை தற்காலிகமாக முடக்குவது, சட்டப்படி அபராதம் விதிப்பது அல்லது வழக்கு தொடர்வது என எச்சரிக்கைகள் வழங்க வேண்டும்.

* 'சாட் ஜி.பி.டி., ஜெமினி' மற்றும் 'கிராக்' போன்ற ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் தளங்களுக்காக இச்சட்டம் சிறப்பு எச்சரிக்கையை வழங்கி இருக்கிறது.

* ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகளை, கருவிகளை தவறாக பயன்படுத்துவது தண்டனைக்கு வழிவகுக்கும் என, பயனாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* கிரிமினல் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், தேர்தல் சட்டங்கள், பாலியல் வன்கொடுமை சட்டங்கள் என பல்வேறு சட்டங்களின் கீழ், நடவடிக்கை பாயும் என்பதையும் பயனாளர்களுக்கு வலைதளங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய சட்டத் திருத்தத்தில் மிக முக்கியமானது என்னவெனில், அரசு மற்றும் போலீஸ் உத்தரவுகளுக்கு உடனடியாக வலைதளங்கள் பதில் அளிக்க வேண்டும் என்பது தான். இதற்கு முன் இருந்த சட்டத்தில், அரசு அல்லது போலீஸின் உத்தரவுகளுக்கு 36 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என இருந்தது. தற்போது இது மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைகளை இனி ஒரு வாரத்திற்குள் தீர்க்க வேண்டும். அவசர வழக்குகள் எனில், 72 மணி நேரத்திற்கு பதிலாக 36 மணி நேரத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும். ஒரு சில நடவடிக்கைகள் இரண்டு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement