சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்

12

புதுடில்லி: சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களில் ஏசி இருக்கை வசதி டிக்கெட் கட்டணம் குறைவு என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் ரயில் கட்டண டிக்கெட் விலை அண்மையில் உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்து இருந்தது. அதே நேரத்தில் டிக்கெட் கட்டண உயர்வு அதிகம் என்ற பேச்சுகளும் எழுந்தன.

இந் நிலையில் லோக்சபாவில் எழுத்து மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அதில் சீனா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களில் ஏசி இருக்கை வசதி டிக்கெட் கட்டணம் குறைவு என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

ரயில்வே அமைச்சகமானது, கட்டணங்களை உயர்த்தும் போது தற்போது அளிக்கப்படும் சேவைகள், அதன் மதிப்பு, அதில் அளிக்கப்படும் வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களை பரிசீலிக்கிறது. வந்தே பாரத் ரயில் சேவைகள் 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது 164 ரயில் சேவைகளுடன் 82 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனித்துவமான பயண அனுபவத்தை வந்தே பாரத் ரயில் சேவைகள் அளிக்கின்றன.

300-400 கிமீ வரையிலான பயணத்திற்கு வந்தே பாரத் ரயிலில் வசூலிக்கப்படும் ஏசி இருக்கை கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.19 ஆகும். இது சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இதே போன்ற ரயில் சேவைகளின் கீழ் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட குறைவு. அங்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.7 முதல் ரூ.20 வரை இருக்கும்.

மற்ற ரயில்களின் சாதாரண வகுப்பு கட்டணங்களும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவே. இந்தியாவில் ஒரு கிலோ மீட்டருக்கு 20 காசு கட்டணம் என்றாலும், அதுவே பாகிஸ்தானில் 54 காசு, வங்கதேசத்தில் 37 காசு, இலங்கையில் 51 காசுகளாக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement