திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்

16


செங்கல்பட்டு:'' தமிழகத்தில் திமுக அரசுக்கு ஆதரவான மன நிலை உள்ளது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இலக்கு



செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடந்த திமுக ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை திமுகவின் கோட்டை என நிரூபித்து காட்ட வேண்டும். தேர்தல் பணி என வந்துவிட்டால் திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இதனை எதிர்க்கட்சியினர் பல முறை கூறியுள்ளனர். தேர்தல் களத்தில் திமுக தான் ஹீரோ. இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் உள்ளது.

மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் நிர்ணயித்து இருக்கக்கூடிய இலக்கு 350 ஓட்டுகள். இதனை நாம் எட்டினால், 2 கோடியே 60 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் நாம் வாங்கிவிடலாம். இந்த தேர்தலில் கட்டாயம் 2 .50 கோடி ஓட்டுகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும். இதனை சாத்தியப்படுத்தி காட்டுவது உங்களின் பொறுப்பு.நீங்கள் ஒவ்வொருவரும் 40 -50 ஓட்டுகளுக்கு பொறுப்பு ஏற்றால் வெற்றி உறுதி.

எஜமானார்கள்



நமது பிரசாரமே அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தை வைத்து உருவாக்கி இருக்கிறோம். இதனை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியையும் வெற்றி ஓட்டுச்சாவடியாக மாற்றப்போவது நீங்கள் தான். உங்களாலும் 7 வது முறை ஆட்சிக்கு வர போகிறோம். எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும், டிவிக்கள் வந்தாலும், தேர்தல் உத்தி தான் முக்கியம். அதற்கு 100 வாக்காளர்களை தேர்தலுக்குள் குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக திமுகவிற்கு ஓட்டுப்போடும் குடும்பங்கள், இதுவரை நமக்கு ஓட்டுப்போடாத குடும்பமாக இருந்தாலும் சரி பிரசாரத்தின் கடைசி நாள்வரை மக்களை சந்தித்து ஓட்டுகளை கேட்க வேண்டும். தேர்தல் என வந்துவிட்டால் மக்கள் தான் எஜமானர்கள்.

வரவேற்பு



திமுக அரசின் சாதனையையும், ஒவ்வொரு குடும்பமும் அடைந்த பலனை எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் இடையே அரசுக்கு எதிரான மன நிலை இல்லை. ஆதரவான மனநிலை உள்ளது. இதனை நமக்கு ஆதரவான ஓட்டுகளாக மாற்றி வெற்றியை அறுவடை செய்வது உங்களின் கைகளில் உள்ளது. 2021 ல் இருந்ததை விட தமிழகத்தில் நமக்கான ஆதரவும் வரவேற்பும் கூடியுள்ளது. 2024 ல் வாங்கும் ஓட்டுகளை பார்த்தால், தெளிவாக தெரியும்.நிச்சயம், 2026 லும் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெற்றி பெற முடியும். அதற்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.


மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன் உங்கள் பணி முடிய போவது இல்லை. கடமையும் முடியப்போவது இல்லை. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்கள், ஓட்டுப்போடுவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டு இயந்திரத்தை கொண்டு செல்லும் வரை கவனமாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் நமது சாதனைகளை சொன்னால் அவர்களே வரவேற்பார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சி



திமுக ஆட்சி மீண்டும் வந்தால் தான் தமிழகம் வளர்ச்சி தொடரும். தமிழகத்தின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்பதை புரிய வையுங்கள். தொழில்துறையை எடுத்துக் கொண்டால் 11 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து, 38 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உறுதி செய்து இருக்கிறோம்.10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் இருந்த தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கிறோம். இந்தியாவில் தமிழகம் மட்டும் தான் இந்த சாதனையை படைத்துள்ளது. நாம் சாதனை செய்யாத துறையே கிடையாது. ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றிய திட்டம் தான் அடுத்த50 ஆண்டுகளில் தமிழகத்தை வழிநடத்தப்போகும் ப்ளூபிரிண்ட் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில், உலக நாடுகளுக்கு இணையாக தமிழகத்தின் வளர்ச்சி அமையும்.

தமிழகமா… டில்லியா...



யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை விளக்க வேண்டும். தற்போதைய சூழலில் திமுகவை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும், பாஜ ஆட்சியாக தான் இருக்கும். நமது கூட்டணியை தவிர வேறு யாருக்கு ஓட்டளித்தாலும், இதுவரை நிறைவேற்றிய நலத்திட்டங்கள் நின்று விடும். தொகுதிகளை குறைத்துவிடுவர். வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்வார்கள். வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல் நடக்கும். இது இரண்டு கட்சிக்கு இடையிலான தேர்தல் அல்ல. திமுக வெர்சல் தேஜ. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், வெல்லப்போவது தமிழக அணியா?, டில்லிஅணியா ?


பாஜ தொடர்ந்து செய்யும் வஞ்சகத்தையும் அதை எதிர்த்து கேள்வி எழுப்பாத அதிமுகவை தோல் உரிக்க வேண்டும். வெறுப்பை விதைத்து அதன் மூலம் வெற்றி பெறத் துடிக்கும் விஷ விதைகளை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது நாம் போராடுவது திமுக வெற்றிக்காக அல்ல. தமிழகத்தின் வெற்றிக்காக. பாஜவின் டப்டா இன்ஜீனுக்கு எதிராக திராவிட மாடலின் சூப்பர் பாஸ்ட் இன்ஜீன். தமிழகம் என்றும் தலை குனியாது. யாருக்கு எந்த தொகுதி, வேட்பாளர் என்பதை என்னிடம் விட்டுவிடுங்கள். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வெற்றி பெற வேண்டும். தோழமை கட்சிகளுடன் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். இதை முழு மனதோடு சொன்னால் முழு வெற்றி எளிதாகி விடும். தேர்தல் பணியை எப்போதோ துவங்கிவிட்டோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement