நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் தவறு: சரி செய்ய சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவு

10


புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் கூறியுள்ளார்.


பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, லோக்சபாவில் அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு, மரபின் படி, பிரதமர் வழங்க வேண்டிய பதிலுரை கூட நடக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக அவை முடங்கிஉள்ளது.


நேற்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.

அந்த நோட்டீசில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பு; ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு; பிரதமர் மோடியை தாக்க முயற்சித்ததாக பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது போன்ற காரணங்களை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்ததை அறிந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாக பரிசீலனைக்கு எடுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும்படி, செகரட்டரி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவுக்கு வரும் வரை, லோக்சபாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வர மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இந்த தீர்மான நோட்டீசில் சில குறைபாடுகள் உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நான்குமுறை குறிப்பிடப்பட்டு உள்ளது. விதிமுறைகளின்படி அத்தகைய குறைபாடு இருந்தால் அது நிராகரிக்கப்பட வேண்டும். இருப்பினும், லோக்சபா செயலகத்தை தொடர்பு கொண்ட சபாநாயகர், அந்த குறைபாடுகளை சரி செய்து அடுத்த கட்டநடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement