கழிப்பறை காகிதம் போல் அமெரிக்கா துாக்கி எறிந்தது ஒப்புக்கொண்ட பாக்., ராணுவ அமைச்சர்

இஸ்லாமாபாத்: அமெரிக்க அரசு பாகிஸ்தானை தேவைக்கு பயன் படுத்திக் கொண்டு, பின்னர் கழிப்பறை காகிதம் போல துாக்கியெறிந்ததாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், கடந்த வாரம் ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இது, நாட்டில் வேரூன்றி உள்ள பயங்கரவாதம் குறித்த பெரும் விவாதத்தை துாண்டியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று உரையாற்றிய ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், பயங்கரவாதம் கடந்த கால சர்வாதிகாரிகளின் தவறுகளின் விளைவு என ஒப்புக்கொண்டுள்ளார்.

பார்லிமென்டில் அவர் பேசியதாவது:

கடந்த, 1999-க்குப் பின், குறிப்பாக 2001ல் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின், அமெரிக்காவுடன் ஏற்பட்ட கூட்டணி மிகப் பெரிய தவறுகளில் ஒன்று.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடுத்த போரில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தன் நிலத்தையும், ஆதரவையும் கொடுத்தது. தலிபான்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது.

ஆனால் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய பின், பாக்., மட்டும் வன்முறை, பயங்கரவாதம், பொருளாதார சுமை, சமூக அழிவு ஆகியவற்றை சந்திக்க நேர்ந்தது.

பாகிஸ்தான் ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு, பின்னர் கழிப்பறை பேப்பரை விட மோசமாக நடத்தப்பட்டு வீசப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement