பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்; டிஏசி ஒப்புதல்

1

புதுடில்லி: பிரான்சிடம் இருந்து, 114 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 6 பி8ஐ ரக போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து இந்திய விமானப்படைக்காக, 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டன. மேலும் கடற்படைக்காக, ரபேல் - எம் எனப்படும், கடல் பாதுகாப்புக்கான 26 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஏப்ரலில் கையெழுத்தானது.


தற்போது, விமானப்படையில் உள்ள போர் விமானங்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, பிரான்சிடம் இருந்து. மேலும் 114 ரபேல் போர் விமானங்களும், கப்பற் படைக்கு 6 பி8ஐ ரக போர் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடியாகும். இந்த முன்மொழிவுக்கு, ஆரம்ப கட்ட அனுமதியை, கடந்த மாதம் ராணுவத் துறை செயலர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் வழங்கியிருந்தது.


இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டி.ஏ.சி., எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து மேலும் 114 ரபேர் போர் விமானங்களும், 6 பி8ஐ ரக போர் விமானங்களும் வாங்க இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், 18 ரபேல் விமானங்கள் நேரடியாக வாங்கப்படவுள்ளன. மீதமுள்ளவை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்படும். டி.ஏ.சி., ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, இருநாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பேச்சுகள் விரைவில் துவங்க இருக்கிறது.


வரும் பிப்ரவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேறகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement