உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ஜாதியை கேட்டதாக குற்றச்சாட்டு; பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கு பாப்பையா ஆதரவு

42

நமது நிருபர்
அமெரிக்காவில் நடந்த விழாவில், உணவு கொண்டு வந்த பெண்ணிடம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஜாதி பற்றி விசாரித்ததாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவுக்கு ஆதரவாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வீடியோ வெளியிட்டுள்ளார்.


அமெரிக்காவின் அட்லாண்டாவில் கடந்த 3ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்றார். அங்கு உணவு தந்த ஒரு பெண்ணிடம் அவரது ஜாதி குறித்து கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. ராஜா மீது விமர்சனங்களும் வந்தன. அதற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மறுப்பு தெரிவித்தார்.

செட்டிநாடா என கேட்டேன். செட்டியாரா என கேட்கவில்லை என்றார். இந்நிலையில் பட்டிமன்ற நடுவரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா ராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:

தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய், அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நன்றாக தெரியும்





ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன்.

ஜாதிய உணர்வு





ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே ஜாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை. அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம்.

பகைமை





எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன்.

வருத்தம்



எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன்" இவ்வாறு சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.


@block_P@

செட்டிநாடா? செட்டியாரா?

இது குறித்து ராஜா விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: அனைவருக்கும் என் அன்பான வணக்கம். உலகெங்கும் இருக்கிற தமிழ் சொந்தங்களுக்கு, ஒரு செய்தியை நான் தர விரும்புகிறேன். அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்து இருந்தோம். அப்பொழுது பல தமிழ் சொந்தங்கள் வீடுகளில் இருந்து சமையல் செய்து எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். உணவு மிகவும் ருசியாக இருந்த காரணத்தால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டேன்.

மற்றபடி "செட்டியாரா?" என்று ஜாதி ரீதியாகத் தான் கேட்கவில்லை. ஒருவர் என்ன சமூகம் என்பதை யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி எனக்கு இல்லை. தமிழகத்தில் எத்தனையோ பகுதிகளுக்கு சென்று பலரையும் சந்தித்துள்ளோம். யாரையாவது ஜாதி மற்றும் சமய உணர்வுகளோடு பார்த்திருந்திருப்பேனா? தமிழன் என்ற ஒன்றைதான் நான் பெருமையாக கருதுகிறேன். உண்மையில் மிகவும் மன வலியுடன் இதை பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை. இருக்கப் போவதும் கிடையாது. தமிழ் சொந்தங்கள் தயவுசெய்து இந்த கருத்துக்களை புறந்தள்ளுங்கள். இவ்வாறு ராஜா விளக்கம் அளித்துள்ளார்.block_P

Advertisement