விஜயை பார்த்து தான் தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்தார்: உதயநிதி கிண்டல்

29

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்' என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார்.

மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி:

மகளிருக்கு உரிமைத்தொகை 5,000 ரூபாய் வழங்கியதால், அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தேர்தலுக்காக கொடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரப்போவது குறித்து பலருக்கு தெரியவில்லை. மத்திய பிரதேசத்தில் ஒருமுறை இதேபோன்ற ஒரு திட்டத்தை வழக்கு தொடர்ந்து நிறுத்தினர்.

அதேபோல், தமிழகத்திலும் நிறுத்துவதற்கு, பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் முயற்சி செய்தன. இதை உணர்ந்தே, முன்னேற்பாடாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சேலத்தில் விஜய் கூட்டத்தில், ஒருவர் இறந்தது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, உதயநிதியிடம், 'தன்னால்தான் 5,000 ரூபாயை தி.மு.க., அரசு வழங்கியதாக, த.வெ.க., தலைவர் விஜய் கூறுகிறாரே' என கேள்வி எழுப்பியதற்கு, 'அண்ணாதுரையே, தன்னை பார்த்து தான் தி.மு.க.,வை ஆரம்பித்தார் என்று கூட விஜய் சொன்னாலும் சொல்வார்' என கிண்டலாக பதிலளித்தார்.

Advertisement