'நெலத்து வாடை'யில் நுகரலாம்...: ஈர நிலத்தின் இலக்கிய வாசனை!

வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். ஜி.குமார் எழுதிய 'நெலத்து வாடை' என்ற நாவல் குறித்து, நாடக இயக்குனர் திலிப் குமார் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இலக்கியத்தில் மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டுதான் பல இலக்கிய படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, தஞ்சை மக்களின் வாழ்க்கை மிகவும் தனித்துவமானது. அவர்கள் பழகும் முறையும், பேசும் மொழியும், அவர்கள் வாழும் மண்ணுக்கு உரிய மகத்துவத்துடன் எதார்த்தமாக இருக்கும்.

படைப்பாளர்கள் கதை, நாவல், கட்டுரைகள் எழுதும் போது, அவர்களின் மண் வாசனை மாறாமல் இயல்பான பாத்திரங்களை படைத்து, வட்டார வாழ்வியலை இலக்கியமாக்கி தருகின்ற னர். 'நெலத்து வாடை' என்ற இந்த நாவல், தஞ்சை ஒரத்தநாடு அருகில் உள்ள ஒரு கிராமத்தை வாசகர்களுக்கு படம் பிடித்து காட்டுகிறது.

ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தின் கதைகளை சோலை சுந்தர பெருமாள், இந்திரா பார்த்தசாரதி, எம்.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, ஜானகிராமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஜி.குமார் புது ஆத்துப்பாசன பயன்பாட்டில் செழுமை அடைந்த ஒரத்தநாடு வட்டாரத்தை கதை களமாக கொண்டு இந்த நாவலை எழுதி இருக்கிறார்.

வேங்கை நாடு 18 ஊர்களில் குளத்துப்பட்டியும் ஒன்று. குளத்துப்பட்டியின் குட்டியப்பனும், பேச்சியம்மாவும், கிணத்துக்கார முட்டு நாகராசும், அவன் மனைவி காத்தாயியும், சாராயம் விற்கும் தருமனும், மீசைக்கார கலியனும், காயாம் பூவும் நம்மோடு கதை மாந்தர்களாக வந்து வாசகர்களுடன் உரையாடுகின்றனர்.

இவர்களுக்குள் இருக்கும் கோபம், ஈரம், ஈகை எல்லாமுமாக கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. இந்த பாத்திரங்கள் இன்றைக்கும் நம் ஊரில், நமக்கு அருகில் வாழும் மனிதர்களாக, நாம் சந்தித்து உரையாடும் நபர்களாக இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

'நெலத்து வாடை' நாவலை வாசிக்கும் போது, எனக்கு பல மனிதர்களை அடையாளப்படுத்தியது. 1970 ல் நடந்த நிகழ்வும், மூன்று தலை முறைகளாக கல்வி அறிவு இல்லாத ஒரு சமூகத்தில் இருந்த குட்டியப்பனின் பேரன், மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு உதவியதையும், குட்டியப்பன் சிறைச்சாலையில் இருந்து வந்து இயற்கை விவசாயம் செய்வதையும் சிறப்பாக விவரிக்கிறார்.

திருந்தி வாழ்பவனுக்கு ஏற்படும் மனமாற்றம் எப்படி பட்டது என்பதை 'நெலத்து வாடை' உணர்த்துகிறது. ஈர நிலத்தில் வீசும் இலக்கிய வாசனையை முகர முடிகிறது.

Advertisement