ஆயிரம் நாட்டுப்புற பாடல்கள்
''ராராரோ ராரிரரோ என் கண்ணே ராரிரரோ ராராரோ
என் இளங்கிளியே என்ன ராஜா என் அய்யா
நீ இத்தனை நாள் எங்கிருந்த
நான் கோதண்ட ராமனோட என் அம்மா நான் கொஞ்சி விளையாண்டேன்
என் வெள்ளி விநாயகரோ என் அய்யா நீ எதிர்க்க வந்தவரோய்
என் வாங்குமணி வாங்கி என் அய்யா உனக்கு வயிரமணி வில் வளைத்தோ''
என்ற தாலாட்டுப் பாடல் தொட்டிலில் கிடக்கும் பச்சிளம் குழந்தையை மகிழ்வூட்ட பாடப்படுவது. இதுபோன்ற நாட்டுப்புற பாடல்களை ஊர் ஊராக சென்று சேகரித்து, சி.டி.,க்களில் பாதுகாத்து நுால்களாக்கி வருபவர் தேனியை சேர்ந்த ஓய்வுபெற்ற தோட்டக்கலை அலுவலர் மனோகரன்.
இவர் சண்டே ஸ்பெஷலுக்கு பேசியபோது...
வேளாண் துறையில் பணியில் சேர்ந்து பின் தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து 2016ல் ஓய்வுபெற்றேன். அரசுப்பணியில் இருக்கும்போதே, பகுதிநேர ஆய்வாளராக முனைவர் பட்டம் பெற்றேன்.
இதுவரை 13 நுால்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். அதில் வேளாண்மை பற்றி மூன்று, பயண நுால் இரண்டு, நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு இரண்டு, தன் வரலாறு, கவிதை நுால், கவிதை ஆய்வுநுால், தலா ஒன்று. நாவல்கள் இரண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளேன். இலக்கியப்பணிக்காகவும், தமிழ்ப்பணிக்காகவும், எழுத்துப்பணிக்காகவும் 41 விருதுகள் பெற்றுள்ளேன்.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு பாடல்கள் அக்காலம் முதலே பாடப்பட்டு வருகின்றன. ஒரு குழந்தை பிறந்தால் 'ராராரோ ராரிரரோ' என்று தாலாட்டு பாடலில் துவங்கும் வாழ்க்கை, ஒப்பாரி பாடலைக் கொண்டு முடிவடைகிறது.
காதல், தொழில், நையாண்டி என காலத்துக்கு ஏற்ற பாடல்களும், வள்ளி, கும்மி பாடல்களும் நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று, அக்கால நாட்டுப்புற பாடகர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து நாட்டுப்புற பாடல்களை கேட்டு பதிவு செய்து வருகிறேன். கம்பம்பள்ளத்தாக்கு நாட்டுபுற பாடல்கள் என்ற நுாலை வெளியிட்டுள்ளேன்.
இதுவரை 1000 பாடல்கள் வரை ஆடியோவாக பதிவு செய்துள்ளேன். என்னிடம் பாடல்களை வழங்கிய சிலர் மறைந்துவிட்டனர். அவர்களது குரல் எனது சேமிப்பில் பாதுகாக்கப்படுகின்றன. தேனியில் வீரபாண்டி முதல் கூடலுார் லோயர் கேம்ப் இடையேவுள்ள கிராமங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், விளை நிலங்களில் சோர்வு போக்க பாடுபவர்களிடமிருந்து பாடல்களை சேகரித்துள்ளேன்.
17 வயது சிறுமி முதல் 109 வயது முதியவர் வரை பலதரப்பட்டவர்களிடமிருந்து பாடல்களை கேட்டு பெற்றுள்ளேன்.
இன்றைய காலத்தினர் முகம் சுளிக்கும் வகையான வரிகளை கொண்ட திரைப்பட பாடல்களையே விரும்புகின்றனர். நாட்டுப்புற பாடல்கள் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு நம் சமூகத்தின் நிலை மாறியுள்ளது. நிச்சயம் ஒரு நாள் நாட்டுப்புற பாடல்கள் நோக்கி அந்த பார்வை திரும்பும். இயற்கையின் நியதி அதுவே. அதற்காக 1000 நாட்டுப்புற பாடல்களுடன் காத்திருக்கிறேன் என்று கூறி பேச்சை முடித்துகொண்டார்.
வாழ்த்த 94434 95969
மேலும்
-
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
-
என்னை மாதிரி நன்கு படிக்க வேண்டும் என்கின்றனர்!
-
வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
-
சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'
-
தி.மு.க., கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கேட்கிறது மனித நேய மக்கள் கட்சி
-
என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்