வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

6

புதுடில்லி: வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான்பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்.

வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி கூட்டணி அதிக இடங்களை வென்றது. இதன் மூலம் அங்கு 17 ஆண்டுகள் கழித்து வங்கதேச தேசியவாத கட்சி ஆட்சி அமைகிறது. அந்நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பிப்.17ம் தேதி பதவியேற்கிறார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று வங்கதேசம் அழைப்பு விடுத்தது. அன்றைய தினம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். எனவே அவர் செல்வாரா? இல்லையா? என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகாமால் இருந்தது.

இந் நிலையில், தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது;

வரலாறு, கலாசாரம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றால் ஒன்றுபட்ட அண்டை நாடான வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுக்கு அந்நாடு மாறுவதை இந்தியா வரவேற்கிறது. விழாவில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்வார். அவருடன், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி செல்வார்.

இவ்வாறு வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement