நாட்டிலேயே முதல் பசு அருங்காட்சியகம்; உ.பி., மாநிலம் மதுராவில் அமைகிறது!

மதுரா: நாட்டின் முதல் பசு அருங்காட்சியகம் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் திறக்கப்படுகிறது.


இது குறித்து, பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
உத்தர பிரதேச பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷத் அமைப்பு சார்பில், மதுராவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கால்நடை அறிவியல் பல்கலை வளாகத்தில் பசு வளர்ப்பு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் பசு அருங்காட்சியமாக இது திகழும்.


பிரஜ் தீர்த்த விகாஸ் பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி சூரஜ் படேல், துணைத் தலைவர் ஷைலஜ் காந்த் மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் சி.பி. சிங், சப்-கலெக்டர் நாகேந்திர பிரதாப், மதுரா- பிருந்தாவனம் மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் லட்சுமி, சுற்றுச்சூழல் ஆலோசகர் முகேஷ் சர்மா, மதுரா கால்நடை அறிவியல் பல்கலை சார்பில் டாக்டர் அமித் சுக்லா ஆகியோர். பசு அருங்காட்சியகத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.


இளம் தலைமுறையினருக்கு பசு மாட்டின் பாரம்பரியம் மற்றும் நம் நாட்டின் அனைத்து முக்கிய கால்நடை இனங்கள், அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த தகவல்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன.


குறிப்பாக பசும்பால் மற்றும் அதன் தயாரிப்புகளான தயிர், வெண்ணெய், நெய் ஆகியவை குறித்தும் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மேலும், அருங்காட்சியக வளாகத்தில் பால் பண்ணையும் அமைக்கப்படுகிறது. இந்த பண்ணையில், பார்வையாளர்கள் தூய்மையான பால் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.


நம் நாட்டு கலாசாரத்தில் பசுவை தாயாக மதிக்கிறோம். சனாதன பாரம்பரியத்தில் பசுவுக்கு ஆன்மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு என்பது பொருளாதார அல்லது விவசாயம் சார்ந்தது மட்டும் அல்ல. மத நடைமுறைகள், நல்லொழுக்க வாழ்க்கை முறை மற்றும் பொது நலனுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement