ஏ.ஐ., மாநாடு, சி.பி.எஸ்.இ., தேர்வு எதிரொலி: டில்லியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு விஐபிக்கள்; போக்குவரத்து மாற்றம்
புதுடில்லி: டில்லியில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் நாளை (பிப்ரவரி 16) துவங்குவதை முன்னிட்டு, மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நாளை முதல் 20ம் தேதி வரை, பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அதே நேரத்தில், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுகள் நாளை துவங்குகின்றன. தேர்வு காலை 10:30 மணிக்கு துவங்குவதால், மாணவர்கள் 10:00 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, டில்லி மாநகரின் பல சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ, முக்கியச் சாலைகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடக்கும் பிரகதி மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புதுடில்லி மாவட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. .
மதுரா சாலை, சுப்பிரமணிய பாரதி மார்க், ராஜேஷ் பைலட் மார்க், தீஸ் ஜனவரி மார்க், அக்பர் சாலை, தீன் மூர்த்தி மார்க், மதர் தெரசா கிரசன்ட், சர்தார் படேல் மார்க், ஜன்பத், பிரோஷா சாலை, சாந்தி பாத், சத்யா மார்க், சப்தர்ஜங் சாலை, கர்தவ்ய பாதை மற்றும் அருகிலுள்ள சாலைகளில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பைரோன் மார்க் மற்றும் மதுரா சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி சர்வதேச விமான நிலையம் செல்ல தேசிய நெடுஞ்சாலை, ராவ் கஜ்ராஜ் சிங் மார்க் மற்றும் துவாரகா 22வது செக்டார் துவாரகா சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்.
புதுடில்லி, பழைய டில்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு ரிங் ரோடு, ஆசிரமம் சவுக், ராஜ்காட், காஷ்மீரி கேட் மற்றும் வந்தே மாதரம் மார்க் ஆகிய சாலைகளில் செல்லலாம்.
மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். அதே நேரத்தில், முக்கியப் பிரமுகர்கள் செல்லும் போது பஸ், டாக்ஸி, ஆட்டோ ஆகியவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். ஆனால், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் எந்த தடையுமின்றி செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்து போலீசாரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, டில்லி மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கூடுமானவரை மெட்ரோ ரயில் சேவைய பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி