ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்த இந்தியா சம்மதம்; சொல்கிறது அமெரிக்கா

6

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதைக் கண்டித்து இந்தியாவுக்கு கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், இந்தியா தனது இறக்குமதியை நிறுத்தவில்லை.

இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. மேலும், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறினார். தொடர்ந்து, எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் நாட்டின் நலன்கள் தான் முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில், கூடுதல் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ வெளியாகவில்லை.

Advertisement