தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; திரண்டு வழிபட்ட பக்தர்கள்

6

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என பல பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

குமரியில் சிவாலய ஓட்டம்



கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவங்கோடு தாலுகாவில், 12 பழங்கால சிவன் கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களுக்கு, மஹா சிவராத்திரி அன்று, பக்தர்கள் ஓடிச்சென்று வழிபடுவது வழக்கம். இது, சைவ - வைணவ சமயங்களை இணைக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

அதன்படி நேற்று, கையில் விசிறி, இடுப்பில் திருநீற்றுப்பையை கட்டிக்கொண்ட பக்தர்கள், 'கோபாலா... கோவிந்தா...' என, கோஷமிட்டபடி ஓடினர். முஞ்சிறையில் தொடங்கிய சிவாலய ஓட்டம், திருநட்டாலத்தில் நிறைவடைந்தது.

பக்தர்கள் வழிபட சென்ற, 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

குன்றத்தில் சிவராத்திரி விழா



மதுரை  திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய விடிய அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மேலுாரில் கல்யாண சுந்தரேஸ்வரர், திருவாதவூர் திருமறைநாதர், திருச்சுனை அகஸ்தீஸ்வரர், அரிட்டாபட்டி குடைவரை உள்ளிட்ட சிவன் கோயில்களில் நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு ஆறுகால பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்



சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை மலை அடிவாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10:00 மணி வரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மலையேறிய நிலையில் தொடர்ந்து பக்தர்கள் வந்தபடி இருந்தனர். வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் மலையேறினர். நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் யுவராஜ், கோயில் ஊழியர்கள் செய்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா





கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
நடப்பாண்டு, மகா சிவராத்திரியையொட்டி, நேற்று மாலை, 6:00 மணி முதல் விடிய விடிய நடந்த விழாவில் ஆதியோகி திவ்ய தரிசனம், சத்குருவால் வழங்கப்படும் மகாமந்-திர தீட்சை, தியானங்கள், அருளுரை, இசை, நடன நிகழ்ச்சிகள் முழுமையாக நடந்தன.


மஹா சிவராத்திரி நமது தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

லிங்க் இதோ: https://specials.dinamalar.com/maha-shivratri-2026/indexhttps://specials.dinamalar.com/maha-shivratri-2026/index

Advertisement