வங்கதேச பிரதமராக தாரிக் நாளை பதவியேற்பு; விழாவுக்கு மோடிக்கு அழைப்பு; ஓம் பிர்லா பங்கேற்பு

டாக்கா: வங்கதேச தேர்தலில் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை மாலை பிரதமராக பதவியேற்கிறார்.

வங்கதேச அரசியல் வரலாற்றில், 35 ஆண்டுக்கு பின் ஆண் ஒருவர் பிரதமராக உள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.

இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

அவர் பிப்ரவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடத்த ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 7ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகாரப்பூர்வ முடிவுகள் 10ம் தேதி அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., தலைமையிலான கூட்டணி 297 தொகுதிகளில் 209 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது.

இதன் மூலம் அக்கட்சியின் தலைவரும், கலீதா ஜியா மகனுமான தாரிக் ரஹ்மான், 60, பிரதமராக பதவியேற்க உள்ளார். கடந்த 1991 முதல் வங்கதேசத்தில் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா ஆகிய இருவருமே மாறி மாறி பிரதமராக இருந்துள்ளனர்.

இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின் வங்கதேச பிரதமராக ஆண் ஒருவர் பதவியேற்க உள்ளார்.

டாக்காவில் உள்ள வங்கதேச பார்லிமென்ட் வளாகத்தில் நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

முதலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

வங்கதேச அரசியலமைப்பின் பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகார வரிசையின்படி, வெளியேறும் அரசின் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் எம்.பி.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுதிரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார். துணை சபாநாயகர் சிறையில் உள்ளார்.

எனவே தேர்தல் கமிஷனர் எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மாலையில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு வங்கதேச அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவருக்கு மும்பையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அவரால் பங்கேற்க முடியாது.

இதையடுத்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தியா சார்பில் பங்கேற்பார் என வெளி யுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

@block_B@

13 நாடுகளுக்கு அழைப்பு

வங்கதேச புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு இந்தியா, சீனா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், மலேஷியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.block_B

@block_B@

மாற வேண்டும்!

பிரதமராக பதவியேற்க உள்ள தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இந்தியா - வங்கதேச உறவுகளை புதிய ஆட்சி யின் அடிப்படையில் மீளமைக்க விரும்புகிறோம். வங்கதேசத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்தியா உணர வேண்டும். மக்கள் தெளிவான ஆதரவை பி.என்.பி.,க்கு அளித்துள்ளனர். இந்திய அரசின் மனப்பான்மையிலிருந்து மாற்றம் துவங்க வேண்டும்,'' என்றார்.block_B

Advertisement