அறிவியல், ஆன்மிகம் இன்றி செயல்பட முடியாது: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

2

கோவை: ''அறிவியல், ஆன்மிகம் இன்றி தனியாக செயல்பட முடியாது,'' என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.


கோவை ஈஷா யோகா மையத்தில், 'ஈசனுடன் ஓர் இரவு' எனும், மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலை வகித்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ஆன்மிக தலம்



சிவன் தான் துவக்கம். சிவன் முடிவில்லாதவர், தனித்துவமானவர். அனைத்து வேறுபாடுகளையும் கடந்தவர். காசிக்கு இணையான இடமாக இவ்விடம் பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கும், காசிக்குமான பிணைப்பு மிகவும் பழமை வாய்ந்தது. மொழி, கலாசாரம் ஆகியவற்றில் தமிழகம் சரித்திர புகழை பெற்றுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்துக்கு ஆன்மிகத்தின் பலனை பெற வந்துள்ளேன்.


இந்தியா ஆன்மிகத்தின் தலம். சிவன் தான் அனைத்துக்கும் மூலமாக இருப்பார். இது நமது கலாசாரத்தின் மிகப்பெரிய பலம். மகாசிவராத்திரி சிவனையும், சக்தியையும் ஒருங்கிணைக்கும் தினம். சக்தி இல்லாமல் சிவன் இல்லை; சிவன் இல்லை எனில் சக்திக்கு திசை இல்லை என்பதையே இது எடுத்துக் கூறுகிறது.


தேசிய பாதுகாப்பு என்பது ஆயுதங்கள், நம் வீரர்களின் பணியில் உள்ளது. ஆனால், ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது புறக்காரணிகளால் மட்டும் வருவதில்லை. தேசிய உணர்வினால் மட்டுமே பாதுகாப்பு வரும். பயமற்ற சமுதாயமே நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த பயமற்ற தன்மை உடலால் மட்டும் வராது. அது ஆன்மிகத்தில் இருந்தும் வரும்.


காத்தல் அழித்தல் பணிகளை சிவன் மேற்கொள்வது போல், நமது ராணுவம், இன்று, பயமின்மை மற்றும் தனித்துவத்தை கொண்டு செல்கிறது.

முக்கிய பங்கு



இன்று ஆதியோகி முன் நம் முப்படையினரும் பாராட்டப்பட்டுள்ளனர். பல துறைகளில் சாதனை படைத்தவர்களுடன் முப்படைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது சிறப்பானது. ஆப்ரேஷன் சிந்துாருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் ஆன்மிக கலாசாரம் உலகளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் ஈஷா யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்தியாவில், கலாசாரம், அறிவியல் இரண்டும் வாழ்வியல் கொள்கைகளாக பார்க்கப்படுகின்றன. நம் கலாசாரம் அறிவியலுடன் இணைந்துள்ளது. சிவன், நடராஜன் அவதாரத்தில் ஆடும் தாண்டவம் பூமியின் இயக்கத்தை குறிக்கிறது. அறிவியலும், ஆன்மிகமும் வெவ்வேறு பாதையில் செல்ல முடியாது என்பதை இது குறிக்கிறது.


இன்றைய நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நம் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள், கோள்களின் இயக்கம், அணுக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர். அறிவியல், ஆன்மிகம் இன்றி தனியாக செயல்பட முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.


ஆதியோகி தான் சப்தரிஷி என்பது இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் துவங்கும் நதிகள், கடலில் கலப்பது போல், பல்வேறு பாதைகளை கொண்டுள்ள மனிதர்கள், ஒரு இடத்தில் உண்மையை அடைகின்றனர். மனித நேயத்தை காட்டும் போது தான் சிவனை அடைய முடியும். அரசு கல்வி, சுகாதாரம் மக்களின் வாழ்க்கை நிலை என, அனைத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் நமது ஆன்மிக தளங்களை புணரமைத்து வருகிறது.

கலாசார வளர்ச்சி



இன்று மொபைல்போன்கள் குழந்தைகளை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், ஈஷா யோகாவில் யோகா, உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்துக்கு நீங்கள் செய்யும் சேவை பாராட்டத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உங்கள் சேவை அளப்பறியது. அனைவரும் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் கலாசார வளர்ச்சிக்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement