பஞ்சரான டயரும் பங்ஷனாகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் ஓடவே ஓடாது: உதயநிதி விமர்சனம்

22

தஞ்சாவூர்: “பா.ஜ., கூட்டணியில் உள்ள பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது,” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அடிக்கடி சங்கி கூட்டம் வரும்; மோடி, அமித் ஷா வருவர். தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது.

உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் மோடி, அமித் ஷாவின் பருப்பு வேகலாம்; ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் வேகாது.

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தலைவர்களை யோசித்து பாருங்கள். 'பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு, துாக்கில் தொங்கி விடலாம்' என ஒருவர் கூறினார். 'பழனிசாமிக்கு கவுன்சிலராக வரக்கூட தகுதி கிடையாது' என மற்றொருவர் கூறினார்.

இந்த கூட்டணியை வைத்துக் கொண்டு, 'தமிழகத்திற்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும்' என பிரதமர் மோடி கூறுகிறார். மோடி அவர்களே, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் அனைவரும் பஞ்சரான டயர்கள்.

உங்களுடைய பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டியினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும், தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

அரசியல் என்பது மக்கள் பணி. கமிட்மென்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும், அடிமைத்தனத்தையும் தி.மு.க.,வினர் விரட்ட வேண்டும்.

டில்லிக்கும், தமிழகத்திற்கும் நடக்கும் போரில், தமிழகம் என்றும் டில்லிக்கு தலைகுனியாது. அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டை கத்திகளும் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement