கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி அத்வாலே அறிவிப்பால் சீமான் கலக்கம்

1

- நமது நிருபர் -

'தமிழக சட்டசபை தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் இந்திய குடியரசு கட்சி போட்டியிடும்' என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிவித்திருப்பது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக உள்ளார்.

51 தொகுதிகள்

இரு தினங்களுக்கு முன், சென்னை வந்த அவர், 'தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்டு உள்ளோம்; தொகுதிகள் ஒதுக்காவிட்டால், 51 தொகுதிகளில், எங்கள் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில், தனித்து போட்டியிடுவோம்,' என்றார்.

அவரது அறிவிப்பு, பா.ஜ., கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, நா.த.க., நிர்வாகிகள் கூறியதாவது:

நாம் தமிழர் கட்சி என்றாலே, கரும்பு விவசாயி சின்னம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அந்த சின்னத்தை பறித்து விட்டதால், 'மைக்' சின்னத்தில் போட்டியிட்டு, மாநில கட்சி அங்கீகாரம் பெற்றோம். எனினும், 'மைக்' சின்னத்தில் சீமானுக்கு விருப்பம் இல்லை.

'ஏர் கலப்பையோடு இருக்கும் விவசாயி' சின்னத்தை பெற்றார். அந்த சின்னத்தில் தான், சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளோம். இந்நிலையில், அத்வாலே கட்சிக்கு, எங்களின் பழைய சின்னமான, கரும்பு விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.

பாதிப்பு

அத்வாலே கட்சி, தமிழகத்தில் போட்டியிடாது. இதனால், பிரச்னை இருக்காது என நம்பினோம். திடீரென 51 தொகுதிகளில், கரும்பு விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக அத்வாலே அறிவித்துள்ளார். இது, சீமானிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, நடிகர் விஜயின் த.வெ.க.,வால், பாதிப்பு ஏற்படும் சூழலில், எங்கள் பழைய சின்னத்தில் அத்வாலே கட்சி போட்டியிட்டால், அதுவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, தன் டில்லி செல்வாக்கை பயன்படுத்தி, அத்வாலே, போட்டியிடுவதை தவிர்க்க, சீமான் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@ பின்னணியில் பா.ஜ.,?

அத்வாலே அறிவிப்பு குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில், அத்வாலேவுக்கு ஒரு தொகுதி கூட தர மாட்டார்கள். அது, அவருக்கும் தெரியும். அத்வாலே தமிழகத்தில் போட்டியிட வேறு காரணங்கள் உள்ளன. ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியின் தலித் ஓட்டுகளை குறி வைத்து, விஜய் அரசியல் செய்கிறார்.

இந்நிலையில், தலித் ஓட்டுகள் அடர்த்தியாக இருக்கும், 51 தொகுதிகளில் அத்வாலே கட்சி போட்டியிட்டால், தொகுதிக்கு 500 ஓட்டுகளை பிரித்தாலும், அது தி.மு.க.,வுக்கு ஆபத்தாகும்.

இதனால் தான், இதுநாள் வரை, தமிழகம் பக்கம் வராத அத்வாலே, திடீரென தேர்தலில் களமிறங்குவதாக சொல்கிறார். இதன் பின்னணியில் நிச்சயம், பா.ஜ., இருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

block_B

Advertisement