எசாலம் கிராமத்தை கஞ்சனுார் ஒன்றியத்தில் சேர்க்க கோரிக்கை

விக்கிரவாண்டி: எசாலம் கிராமத்தை அரசாணை வெளியிட்டபடி கஞ்சனுார் ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் என துணை தலைவர் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி புதிதாக உருவாக உள்ள கஞ்சனுார் ஒன்றியத்தில், எசாலம் கிராமத்தைச் சேர்த்து அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் எசாலம் கிராமத்தை விக்கிரவாண்டி ஒன்றியத்திலேயே இருக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் கனிமொழி சிலம்பரசன் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் பலர் கிராம சபையை புறக்கணித்தனர்.

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் எசாலம் கிராமம் இருக்க வேண்டும் என பொய்யான தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ளார் என்ற புகார் எழுந்தது.

இது பற்றி தகவலறிந்த பொதுமக்கள், ஊராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சென்னை உயர் மன்ற வழக்கறிஞர் மூலம் கலெக்டர், மாவட்ட ஊராட்சி அதிகாரி ஆகியோருக்கு அரசு அறிவித்த படி புதியதாக உருவாகவுள்ள ஒன்றியத்தில் எசாலம் இருக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.

மேலும் நேற்று எசாலம் கிராம ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் தங்கள் கிராமத்தை புதிதாக உருவாக உள்ள கஞ்சனுார் ஒன்றியத்தில்தான் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனு எழுதி அதை நீதி மன்ற வழக்கிற்கு அனுப்பினர். கிராமத்தில் இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement