ஆப்கன் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

10

காபூல்: ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் டி.டி.பி., பயங்கரவாதிகள் 28 பேர் உயிரிழந்தனர். இதனால் பதற்றமான சூழல் நீடிக்கிறது.


@1brநம் அண்டை நாடான பாகிஸ்தான் , மறுபக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி . , எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பஜவூர் மாவட்டம் மலங்கியில் உள்ள சோதனை சாவடி மீது வெடிபொருள் நிரம்பிய வாகனம் ஒன்றை மோதி வெடிக்கச் செய்தனர் . இதில் செக் போஸ்ட் முழுதும் தரைமட்டமானது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.



இந்நிலையில் இன்று அதிகாலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் டி.டி.பி., பயங்கரவாதிகள் 28 பேர் உயிரிழந்தனர். இதனால் பதற்றமான சூழல் நீடிக்கிறது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது விமானப்படையை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.


குறிப்பாக பக்திகா மாகாணத்தில் பெர்மால் மற்றும் ஆர்குன் மாவட்டங்களில் கல்வி நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி பாசோத் மற்றும் கானி கேல் மாவட்டங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


ஆப்கானிஸ்தான் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிகாலையில் குண்டுகளை வீசி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisement